எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: இடைக்கால மனு மீதான விசாரணை நாளை!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சேதத்துடன் தொடர்புடைய இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) மேலும் மூன்று மனுதாரர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவில், இடைக்கால மனு ஒன்றை ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 12 ஆ ம் திகதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சேதத்துக்காக இழப்பீடு கோரும் செயல்முறையுடன் தொடர்புடைய முறைகேடுகள், தவறான கையாளுகை, நாசவேலை, இலஞ்சம் மற்றும் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்கள் இம்மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த இடைக்கால மனுவினை அனுமதிப்பது தொடர்பில் நாளை (ஜூன் 15) உயர் நீதிமன்றம் பரிசீலிக்கவுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற சரக்குக் கப்பலானது 2021 மே மாதம் 20ம் திகதியன்று கொழும்புக்கு அருகே கடலில் தீப்பிடித்து சில நாட்களுக்கு பின்னர் அது கடலில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அதிகளவான பிளாஸ்டிக் மற்றும் நச்சு இரசாயனங்கள் கடலில் மாசடையச் செய்து, மிக மோசமான கடல் சார்ந்த பேரழிவினை ஏற்படுத்தியது. விருப்புச் சார்பான முரண்பாடுகளுக்கு மத்தியில், எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதத்துக்கு பின்னரான நடவடிக்கைகளுக்கு கப்பல் காப்புறுதியாளரின் பிரதிநிதியான இன்டர்நேஷனல் டேங்கர் ஒனேர்ஸ் பொலூஷன் பெடரேஷன் லிமிட்டட் International Tanker Owners Pollution Federation Limited (ITOPF) இன் உதவியினை இலங்கை அதிகாரிகள் நாடியிருந்தனர்.
மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவத்தினால் இலங்கையின் கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதங்களை கருத்திற்கொண்டு உரிய தனிப்பட்ட தரப்பினரிடமிருந்து இழப்பீட்டினை பெற்றுக்கொள்ளல் மற்றும் மீனவ சமூகத்தினருக்கும், சுற்றுலா துறையில் ஈடுபடும் நபர்களுக்கும் இழப்பீட்டை பெற்றுக்கொடுத்தல் ஆகியவை உயர் நீதிமன்றத்திடம் கோரும் நிவாரணங்களில் உள்ளடங்கும்.
கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீட்டை பெறுதல், வேண்டுமென்றே உதாசீனப்படுத்திய அல்லது தமது கடமைகளை சரியாக செய்தத் தவறிய அரச அதிகாரிகள் மீது வழக்குத் தொடுத்தல், அவர்கள் ஈடுபட்ட இலஞ்சம் அல்லது ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவத்தினால் ஏற்பட்ட சேதங்களை அறிக்கைப்படுத்தல் என்பன TISL நிறுவனம் கோரும் ஏனைய நிவாரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சேதத்துடன் தொடர்புடைய இழப்பீடு கோரிக்கையுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்,
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சேதம் தொடர்பில் மஞ்சுசிறி நிசங்க என்றழைக்கப்படும் சாமர குணசேகர என்பவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்பு செய்யப்பட்டுள்ளது என 2023 ஏப்ரல் மாதம் 25ம் திகதி நீதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பு,
எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதத்தினால் கடலில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை உருவாக்கியதாக கூறப்படும் சிந்தக்க வரகொட என்பவருக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக வெளிக்கொண்டு வருவதை தவிர்க்கும் வகையில் தனது இயந்திரத்தை பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி மற்றுமொரு தரப்பினர் பணம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டும் அவரது ஊடக அறிக்கை மற்றும்
எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதத்தினால் இலங்கை பெற வேண்டிய சரியான தொகையினை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தோல்வி ஆகிய நான்கு முக்கிய விடயங்கள் இந்த இடைக்கால மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.