பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!
யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையத்தின்(CGEE) ஏற்பாட்டில், பெண்களுக்கான உதவி வழங்கும் திட்டம் நேற்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றலுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் மூன்று பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் துறைசார்ந்த பயிற்சியுடன் பசு மாடுகளும், வட இலங்கை சங்கீத சபை பரீட்சைக்கான ஆயத்தப்படுத்தலுக்காகவும், நிகழ்வுகளில் வாசிப்பதற்காகவும் யுத்தத்தினால் இரு கண்களும் முற்றாக பார்வை இழந்த இரு பெண்களுக்கு கிற்றார் மற்றும் ஓகண் இசைக் கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
நன்கொடையாளர்களையும், சேவை நாடும் மகளிரையும் இணைக்கும் முகமாக இடம்பெற்ற இந் நிகழ்வில், ரூபா 556,000.00 பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
இதன் போது குறித்த பயனாளிகளுக்கான ஒப்பந்த கடிதங்களும், குறித்த உதவிகளை நல்கிய நன்கொடையாளர்களுக்கான நன்றி தெரிவித்தல் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையத்தின் அங்கத்தவர்கள், வன்னி விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள், மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.






