உக்ரைனுடனான போர் பல ஆண்டுகள் நீடிக்கும் - டிமிட்ரி மெட்வடே
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதனை விரும்பாத ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன.
அதன்படி ரஷியா மீது பொருளாதார தடை, உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அந்த நாடுகள் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது.
இந்த நிலையில் வியட்நாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வடேவிடம் உக்ரைன் போர் நிலவரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு அதாவது பல தசாப்தங்கள் நீடிக்கலாம் என்றும், ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் மீண்டும் போர் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நாடுகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.