ஆஸ்திரேலிய தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி
பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் மோடிக்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி இன்று ஆஸ்திரேலியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
சுரங்கம் மற்றும் கனிமங்கள் புதைபடிவ எரி பொருள் துறை, பசுமை எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழில் அதிபர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் தொழில் வாய்ப்புகள் குறித்து மோடி எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறும்போது, உலகின் தலைசிறந்த முதலீட்டு நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.
இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார். பிரதமர் மோடி, சிட்னியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை கொண்டாடும் சமுதாய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் வர்த்தக மேம்பாடு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.