கொடைக்கோன் தியாகி ஐயாவால் வறிய மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்பு உதவி
பல்கலைக்கழகம் மற்றும் கல்வியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான உதவித் தொகைகள் வழங்கும் நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் பதுளையில் நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுள்ள பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 100 இளநிலை பட்டதாரிகளுக்கு ஐக்கிய தொழிலாளர் முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய அ. அரவிந்தகுமார் அவர்களின் ஏற்பாட்டில் தியாகி அறக்கொடை நிதியம் இவ் வேலை திட்டத்தை பதுளை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளது.
இவ்வேலைத் திட்டத்தின் மூலம் அவர்களின் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் வரை மாதாந்தம் இவ் உதவித்தொகையினை வழங்குவதற்கு தியாகி அறக்கொடை நிதியம் முன்வந்துள்ளது. இதற்கமைவாக இவர்களுக்கான முதலாவது ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்வு பதுளை செனரத் பரண வித்தாரண மண்டபத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன், ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் நிதியத்தின் இணைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் உள்ளிட்ட. முக்கிய பிரமுகர்கள்பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இராஜாங்க அமைச்சர் மற்றும்தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











