நடுத்தர தொழில் வர்க்கத்தினர் பெரும் ஆபத்தில்: சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்த சஜித்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரைச் சந்தித்தனர்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், திங்கட்கிழமை (15) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இவ்வாண்டின் இறுதியில் முதலாவது மீளாய்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வழமையான ஆலோசனைகளின் ஓர் அங்கமாகவே சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவின் இலங்கைக்கான விஜயம் அமையப்பெற்றுள்ளது.
நாட்டின் நிலவும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக விரிவாக விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர்,சலுகை அடிப்படையில் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு உதவுமாறும் சம்பந்தப்பட்ட தூதுக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக வருமான வரி அதிகரிப்பு காரணமாக நாட்டு மக்கள் தாங்க முடியாத அழுத்தத்திலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது குறித்து கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் பெரும் ஆபத்தில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த அசௌகரியமான சூழ்நிலையில் இருந்து நாட்டு மக்களை விடுவித்து நாட்டு மக்கள் மீண்டும் எழுந்து நிற்கத் தேவையான ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அரச நிர்வாகம் சீரற்ற இருப்பதாகவும், திருட்டு மற்றும் துஷ்பிரயோகங்களை இல்லாதொழித்து நாட்டுக்கு கிடைக்கும் பணத்தை வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அழுத்தங்களையும் அரசாங்கத்துக்கு வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் குழுவினரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவின் பிரதானிகளான கலாநிதி ஹர்ஷ டி சில்வா,கபீர் ஹாசிம்,எரான் விக்கிரமரத்ன அடங்களாக பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்,நாலக கொடஹேவா,நிரோஷன் பெரேரா,ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.