தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Kanimoli
2 years ago
தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 கடந்த பத்து வருடங்களில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். திறன் மற்றும் தொழில் கண்காட்சியான “skills Expo 2023” நிகழ்வில் இன்று (12) கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த வருடத்தை திரும்பி பார்க்கின்ற போது இவ்வாறானதொரு கண்காட்சியை நடத்த எம்மால் முடியுமா என்பது கேள்விக்குரியாகியிருந்தது. 

குழப்பகரமான சூழலில் முடங்கிக் கிடந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்தார். நாம் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல் எமது செலவுகளையும் நாம் உரிய முறையில் முகாமைத்துவம் செய்திருக்கலாம். கடந்த பத்து வருடங்களில் நமது செலவினங்கள் தொடர்பில் பார்கின்ற போது, நாம் கல்விக்கு பணம் ஒதுக்கீடு செய்யாமல் சில அரச நிறுவனங்களுக்கே அதிகமாக பணம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்பதை கண்டுகொண்டேன்.

 நாம் ஸ்ரீ லங்கன் விமான சேவை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு செலவிட்ட பணத்தை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் செலவிட்டிருந்தால் தெற்காசியாவின் மிகச்சிறந்த கல்வித்துறையை கொண்ட நாடுகளுடன் போட்டியிடும் நிலையை அடைந்திருப்போம். அவை ஒன்றையும் நாம் செய்யாமையால் இன்று கடன்களை செலுத்தி முடிக்க வேண்டிய நிலை நமக்கு உருவாகியுள்ளது. அடுத்த பத்து வருடங்களில் விரைவாக கடன்களை செலுத்தி முடிக்கவே நான் முயற்சிக்கிறேன். நாட்டிற்கு பயனற்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் காணப்பட்டன. 

அவ்வாறான திட்டங்களுக்கு வழங்கிய நிதிக்கு என்ன ஆனது என்பது இன்று வரையிலும் மர்மமாகவே உள்ளது. அவ்வாறான செலவுகளையே நாம் முதலில் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக நாம் அத்தியாவசியமற்ற சேவைகளை முதலில் கட்டுப்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்காக அத்தியாவசிய சேவைகளுக்கான செலவீனங்கள் மட்டுப்படுத்தப்படாது. எதிர்காலத்தில் கல்வி,சுகாதாரம்,சமூக பாதுகாப்பு, வீடமைப்பு ஆகிய விடயங்களுக்காக மாத்திரம் சலுகை வழங்கல் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம். இலங்கை, அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய நாடாகும்.

 எனவே, அறிவை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். பாடசாலைக் கல்வியை வழங்கிய பின், தொழில் தகைமையை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இன்று பல அமைப்புகள் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. கல்விக்காக நாம் தனி அமைச்சரவைக் குழுவை நியமித்துள்ளோம். எனவே கல்வியின் நவீனமயமாக்கலை இங்கிருந்து தொடங்குவோம். நாம் ஒரு புதிய உலகத்தை நோக்கி நகர்கிறோம். இன்னும் பத்து ஆண்டுகளில் நமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படும். 

ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்திற்காக நாம் கல்வியை உருவாக்க வேண்டும். அதற்கான பலமான வேலைத்திட்டம் தேவை. இளைஞர்களுக்கு இதுபற்றி முறையாகத் தெளிவுபடுத்தி, எதிர்காலத்திற்குத் தேவையான அறிவும் திறமையும் கொண்ட ஒரு பரிபூரண சமுதாயத்தை உருவாக்குவதே எனது எதிர்பார்ப்பு ஆகும். அதற்குத் தேவையான நிதியை 2024ஆம் ஆண்டு முதல் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!