முள்ளிவாய்க்கால் கஞ்சி: இரண்டாம் நாள் இன்று கிளிநொச்சியில் ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் இரண்டாம் நாளானான இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கபப்ட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது, மக்களை பட்டினியில் இருந்து காப்பதற்காக, சில தன்னார்வ அமைப்புகள், தங்களிடம் இருந்த அரிசியை பங்கிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியாக காய்ச்சி வழங்கின.
இதனை நினைவுப்படுத்தும் வகையில் வருடாந்தம் குறித்த காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி, நேற்று ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தில், எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கஞ்சி காய்ச்சி வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்றைய தினம், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாகவும், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மாங்குளம் ஆகிய பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.