பிரித்தினியாவில் கவுன்சிலராக மீண்டும் அபார வெற்றியீட்டிய யாழ்ப்பாணத் தமிழர்!
பிரித்தினியாவில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கவுன்சிலர் ஜெய் கணேஷ் மீண்டும் அபார வெற்றியீட்டியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் நாடளாவிய ரீதியில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் பாரிய தோல்விகளை சந்தித்திருந்தாலும், கவுன்சிலர் ஜெய் கணேஷ், அவரது ஷெர்போர்ன் செயின்ட் ஜான் மற்றும் ரூக்ஸ்டவுன் தொகுதியில் லேபர், லிப் டெம் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து அபார வெற்றியீட்டியுள்ளார்.
கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜெய் கணேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“ஷெர்போர்ன் செயின்ட் ஜான் மற்றும் ரூக்ஸ்டவுன் தொகுதியில் கன்ஸர்வேட்டிவ் வேட்பாளரான என் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்து மீண்டும் உங்கள் வார்டு கவுன்சிலராக என்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது கட்சி இந்த உள்ளூராட்சி தேர்தலில் நாடளாவிய ரீதியில் பின்னடைவுகளை சந்தித்திருந்தாலும் என் மேல் நம்பிக்கை வைத்து, எனக்கு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
நான் வாழும் தொகுதிக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை ஒரு பெருமிதமாக கருதுவதுடன், எனக்கு வாக்களித்த உங்கள் நலனை கருத்தில் கொண்டு உங்கள் நலனில் அக்கறையுடன் செயற்படுவேனென்று உறுதியளிப்பதுடன், பேசிங்ஸ்டோக் மற்றும் டீன் நகர சபையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் ” என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 963 ஆக இருந்த வாக்குகளை இந்த ஆண்டு 1049 ஆக உயர்த்தியுள்ளார். கடந்த ஆண்டில் 45.7% ஆக இருந்த வாக்குப் பங்கை 46.6% ஆக உயர்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு 135 ஆக இருந்த பெரும்பான்மையை 175 ஆக உயர்த்தியுள்ளார். இங்கிலாந்தில் அதிகாரமில்லாத கௌரவ மேயர் பதவிகளை பல தமிழர்கள் வகித்திருந்தாலும், கவுன்சிலர் ஜெய் கணேஷ் மட்டுமே கபினட் அந்தஸ்துள்ள கவுன்சிலராக பதவி வகித்துவருகிறார்.
இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் செயின்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் பயின்ற இவர், கொழும்பு இந்து கல்லூரியில் தனது படிப்பைப் நிறைவு செய்தபின் இங்கிலாந்தில் கடந்த இருபத்திரெண்டு வருடங்களாக சுற்றுலாத்துறை, உள்ளூராட்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே சார் துறைகளில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.