இந்திய பிரதமரின் முதன்மை செயலாளரை சந்தித்தார் இலங்கையின் உயர்ஸ்தானிகர்

இலங்கையின் ஜனாதிபதியின் இந்திய பயணம் தொடர்பில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய பிரதமரின் முதன்மை செயலாளர் பிரமோட்குமார் மிஸ்ராவை சந்தித்துள்ளார்
இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
எனினும் இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இந்திய பயணம் தொடர்பான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், இந்திய பிரதமரின் முதன்மை செயலாளருடனான சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் வரலாற்று மற்றும் ஆழமான உறவுகளை நினைவுகூர்ந்த இந்திய பிரதமரின் முதன்மைச் செயலாளர், அண்டை நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் போது உதவுவது இந்தியாவின் கடமை என்று கூறியுள்ளார்.
இதேவேளை 2009 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது இலங்கைக்கும் குஜராத் மாநிலத்துக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, சுற்றுலாத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
இதற்கிடையில் இலங்கையின் உயர்ஸ்தானிகர்,கடந்த சில வாரங்களில்,இந்திய நிதிச் செயலர் டி.வி. சோமநாதன், அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா மற்றும் நிதி ஆயோக் தலைவர் பரமேஸ்வரன் ஐயர் உட்பட இந்திய அரசின் பல முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.



