கோபத்தைக் கையாள்வது எப்படி?

Nila
1 year ago
கோபத்தைக் கையாள்வது எப்படி?

"கோபப்படாதீர்கள் என்று யாரிடமும் நான் ஞானி போன்று சொல்லமாட்டேன். கோபம் வந்தால் தாராளமாக கோபப்படுங்கள், ஆனால் பத்து வருடத்திற்கு பின்னர் யோசித்துப் பார்த்தாலும் நீங்கள் கோபப்பட்டது சரிதான், நியாயம்தான் என்று சொல்லக்கூடியதாக இருக்கவேண்டும்.” என்றார்.
“நான் அன்று கோபப்படிருக்கக்கூடாது, பேசாமல் இருந்திருக்கலாம், இதற்குக் கோபப்பட்டிருக்கத்தான் வேண்டுமா?” என்பதுபோல யோசிக்கச் சந்தர்ப்பம் இருந்தால், கோபத்தை கொஞ்சம் முயற்சிசெய்து வேறுபக்கம் திருப்பலாமா என்று யோசியுங்கள்."  என்றார். கோபத்தை தந்திரோபாயமாக மடைமாற்றும்படி சொன்னார்.

ஒருசமயம் கிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர, அருச்சுனன் இம்மூவரும் ஓர் அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். நடு இரவாகிவிட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.
வனத்தில் கொடிய மிருகங்கள் இருக்கும் என்பதால், மூவரும் ஒருசேரத் தூங்கக்கூடாது என்றும், சாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்கவேண்டும் என்றும் முடிவுசெய்தனர்.

அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல,அருச்சுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகைமண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், அதற்கு ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவருக்கும்  அருகில் சென்றது. அதைக்கண்ட அருச்சுனன் கோபத்துடன் அதைத்தடுத்தான்.

அப்போது அவ்வுருவம், அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும், அதற்கு அருச்சுனன் துணைசெய்யவேண்டும், என்றும் கேட்டது. அதைக்கேட்டுக் கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் அவன் தாக்கினான். அருச்சுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெரிதாகியது. அருச்சுனனை பலமாகத் தாக்கிவிட்டு அது மறைந்தது.

இரண்டாம் சாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ச்சுனன் தூங்கச்சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி, அருச்சுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது. அதைக் கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாயில்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு, அவ்வுருவம் மறைந்துவிட்டது.

மூன்றாம் சாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச்சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். 

“ஏன் சிரிக்கிறாய்?” என்றது அவ்வுருவம். “உனது தூக்கிய பற்களையும் அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான்” என்றார். சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலிசெய்வதைக் கண்டு மிகுந்த கோபத்துடன் அது சண்டைபோட்டது. கிருஷ்ணரோ புன்னகை மாறாமலே, சண்டையிட்டார். கிருஷ்ணர், சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறித் தரையில் நெளிந்தது.

கிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்துவைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அருச்சுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும் , அவர்களைத் தாக்கியதும், அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது என்பது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, “நீங்கள் இருவரும் தீவிரமாகச் சண்டை போட்ட உருவம் இதுதான்.” என்றார்.
“நீங்கள் அதனுடன் சண்டைபோடும்போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக்கொண்டே சண்டைபோட்டதால், இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டேவந்து பின்பு ஒரு புழுவாக மாறிவிட்டது.” என்றார். 

கிருஷ்ணர் கோபப்படவில்லை என்பதற்காக தனது கடமையிலோ எதிர்ப்பிலோ சமரசம் செய்துகொண்டு காலில்விழவில்லை. மாறாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, எதிர்க்க வந்தவனோடு கோபப்படாமல் சிரித்தார். எதிர்த்தவன் கோபத்தால் நிலை தடுமாறிச் சின்னஞ்சிறு புழுவாகிப்னோனான். பிரச்சினைகளை புழுவாக்குவதும் வடிவத்தில் பெரிதாக்கி அரக்கனாக்குவதும் நாம் எதிர்வினையாற்றும் முறையைப் பொறுத்ததுதான். 

வம்புச்சண்டைக்கு வருபவனை புன்னகையோடு எதிர்கொண்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். ஒருவேளை அவன், தான்- உங்களை எதிர்க்கும் விடயத்தில் தெளிவில்லாமல் அல்லது பிழையாக வழிநடத்தப்பட்ட அப்பாவியாகக்கூட இருக்கலாம் அல்லவா?