நள்ளிரவு முதல் முடங்கப்போகும் இலங்கை

Kanimoli
3 years ago
நள்ளிரவு முதல் முடங்கப்போகும் இலங்கை

இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பில் இன்றைய அமைச்சரவை சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களை அறிவித்திருந்தார்.

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்கமைய, துறைமுகம், சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், ஏற்றுமதி தொழிற்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் முப்படை என்பவற்றின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் இதற்கமைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நகர பாடசாலைகளுக்கு ஜூலை 10ஆம் திகதி வரை விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்பட்டாலும் கிராமப்புற பாடசாலைகள் போக்குவரத்து வசதிகளுக்கேற்ப இயங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஜூலை 10ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடியால் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4