சீனாவுடன் போருக்கு தயார் - ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பு

தைவான் மீது சீனா படையெடுக்கும் பட்சத்தில், தைவானை பாதுகாக்க சீனாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சமீப காலமாக தைவானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை சீனா முடுக்கிவிட்டுள்ளது. தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற சீனா முயற்சிக்காது என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
அமெரிக்கா தைவானுக்கு வெளிப்படையான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதைத் தவிர்த்து வருகிறது. அதனுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை என்ற போதிலும், தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிடும்.
தைவானை பாதுகாக்க சீனாவுடன் போரிட அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு தைவானைப் பாதுகாக்கும் பொறுப்பு இன்னும் கூடியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி பைடனின் கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் உறுதியை எந்த நாடும் குறைத்து மதிப்பிடக் கூடாது என சீன வெளிவிவகார அமைச்சு பதிலடி கொடுத்துள்ளார்.



