உக்ரைன் ராணுவத்தினரை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்

குவாட் உச்சிமாநாட்டின் இடையே, உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
உக்ரைன் பாராளுமன்றத்தில் போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடர் இன்று உரையாற்றினார். அப்போது உக்ரைனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உள்ளது என்றார்.
உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கில் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் படைகள் மீதான இந்த தாக்குதலின்போது கட்டளை மையங்கள், வெடிமருந்து கிடங்குகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் உக்ரைனின் மூன்று கட்டளை மையங்கள், ராணுவ மையங்கள், ராணுவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரியுபோல் உருக்கு ஆலையில் இருந்து 2,500 உக்ரேன் வீரர்களை கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக ரஷியா தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த பகுதி முழுவதையும் தனது முழுக் கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷிய அறிவித்துள்ளது. இந்நிலையில் உருக்கு ஆலை பகுதியில் 20,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உக்ரைனின் டான்பாஸ் நகரில் சண்டை தீவிரமடைந்து வருவதால் ரஷியாவுடனான போர் நிறுத்தத்தை உக்ரைன் நிராகரித்துள்ளது. உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனில் இருந்து கைதிகளை பரிமாறிக் கொள்வது குறித்து மாஸ்கோ பரிசீலிக்கும் என ரஷிய பேச்சுவார்த்தைக் குழு மூத்த உறுப்பினரான லியோனிட் ஸ்லட்ஸ்கி, தெரிவித்துள்ளார். இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் சிவப்பு கம்பளத்தில் ஓடினார்.
எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன் தனது ஆடையைக் கழற்றி வீசி அரை நிர்வாணமாக நின்றார். உக்ரேனிய கொடியை தனது உடலில் வரைந்து இருந்த அவர், எங்களை கற்பழிப்பதை நிறுத்து என்ற வார்த்தைகளை எழுதியிருந்தார். அதிகாரிகள் அவரை சூழ்ந்து ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்த விவகாரத்தில் அமெரிக்கா உடன் மோதல் போக்கை ரஷியா கையாண்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியுறவுத் துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் உள்பட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக பயண தடை விதித்து ரஷியா உத்தரவிட்டுள்ளது.



