பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கை ராஜாங்க அமைச்சரிடம் கையளிப்பு
பஸ் கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 320 வீதிகள் தொடர்பான அறிக்கை இன்று பிற்பகல் இராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென பஸ் சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதன்படி, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் பஸ் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
எரிபொருள் மானியத்தை வழங்க முடியாவிட்டால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், கலந்துரையாடலில் கலந்துகொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் பஸ் கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்கு நான்கு நாட்கள் அவகாசம் கோரினர்.
அதன்படி தயாரிக்கப்பட்ட அறிக்கை, திலும் அமுனுகம இராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் நாளைய தினம் இது தொடர்பில் விளக்கமளிக்க உள்ளார்.
புதிய திருத்தத்தின்படி, பொது சேவைகள், சொகுசு, அரை சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளின் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படும்.
தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 16 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது