ஒரே ஒரு வீடியோ அழைப்பு மூலம் 900 பேரை வீட்டுக்கு அனுப்பிய நிறுவனர்! – அமெரிக்காவில் பரபரப்பு! நடந்தது என்ன?

ஒரு ஜூம் கால் மூலமாக பிரபல நிறுவனத்தின் சிஇஓ 900 ஊழியர்களின் வேலையை பறித்துள்ள விவகாரம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பின் ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
அந்தவகையில் அமெரிக்காவில் பெட்டர் டாட் காம் என்ற நிறுவனம் ஒரு ஜூம் கால் மூலமாக 900 ஊழியர்களின் வேலையை பறித்துள்ள விவகாரம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் அடகு வைத்தல், ரியல் எஸ்டேட் இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் சுமார் 10,000பேருக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் இங்கு பணியாற்றும் 900 பேருக்கு கடந்த புதன்கிழமையன்று ஜூம் கால் அழைப்பு வந்துள்ளது.
அப்போது எதிர்முனையில் பேசிய நிறுவனத்தின் சிஇஓ விஷால் கார்க், “இந்த காலில் யாரெல்லாம் இணைத்திருக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் வேலையை விட்டு நிறுத்தப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு இனி பெட்டர் டாட் காமில் வேலை இல்லை” என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை குறித்து விஷால் கூறுகையில், “பொதுவாக நான் இப்படி நடந்து கொள்ளமாட்டேன். கடந்த முறை காலில் பேசி பணியாளர்களை நீக்கம் செய்த போது நான் அழுதுவிட்டேன்.
ஆனால், நான் இப்போது பணியில் இருந்து நீக்கியவர்கள் ஒரு நாளில் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே பணிபுரிந்துள்ளனர். எனவே இவர்கள் சக ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் நேரத்தை திருடியுள்ளனர்.
காரணம் இதுதான்..!
மேலும் அவர்கள் உற்பத்தி குறைவு, செயல் திறமையின்மை உள்ளிட்ட காரணங்களால் வேலையிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்த செய்திகளை வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகங்கள் பணியாளர்களுக்கு வந்த அழைப்பை நரகத்திலிருந்து வந்த அழைப்பு என எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.



