சிறந்த பெண்மணிக்கான விருதை பெற்ற தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் !
கேரள மாநிலத்தை சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ் ஒரு சிறந்த இந்தியத் தடகள வீராங்கனை. இவர் 2003-ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் பங்கேற்று 6.70 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
அதனை தொடர்ந்து 2005-ல் நடந்த தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
இந்தியாவிலேயே பதக்கம் வென்ற முதல் தடகள வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். மேலும் ஒரே சிறுநீரகத்துடன், தடகள போட்டியில் கலந்து கொண்டு பதக்கத்தை தட்டி சென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர்.
இவர் தான் சாதித்தது மட்டுமல்லாது தன்னை போன்ற பெண்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று தீவிர முயற்சி செய்தவர். மேலும் சொந்தமாக அகாடமி வைத்து நடத்தி அதன் மூலம் பல வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு பெற செய்ய வைத்துள்ளார்.
மேலும் நாட்டின் சமூக மாற்றத்திற்கு ஓயாமல் தொடர்ந்து குரல் கொடுத்ததற்காகவும், இளம் பெண்கள் பலரை ஊக்குவித்து கொண்டிருப்பதாலும் இவரை கௌரவிக்கும் விதமாக 2021-ம் ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருது 'THE WOMEN OF THE YEAR' விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இத்தகைய உயரிய விருதை பெற்றதை நினைத்து நான் பெருமை அடைகிறேன், என்னுடைய இந்த முயற்சிக்கு அங்கீகாரம் அளித்ததற்கு நன்றி" என்று என்று ட்வீட் செய்துள்ளார்.