கலிலியோ கலிலி

Keerthi
2 years ago
கலிலியோ கலிலி

"உணர்வுகள், ஆறாம் அறிவு, பகுத்தறிவு ஆகியவற்றை மனிதனுக்குத் தந்த கடவுளே அவற்றை மனிதன் பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார் என்ற கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது"https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/bb5bb0bb2bbebb1bcdbb1bc1-ba8bbebafb95bb0bcdb95bb3bcd/images3.jpg"text-align: justify; ">பிறப்பு

1564-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் நாள் இத்தாலியில் Pisa-நகரில் பிறந்தார் கலிலி. ஆறு பிள்ளைகளில் மூத்தவர் அவர். அவரது குடும்பம் சமூகத்தில் உயரிய அந்தஸ்து பெற்ற குடும்பம் என்றாலும் பணக்கார குடும்பம் அல்ல.

கல்வியறிவு
சிறுவயதிலேயே அறிவுக்கூர்மையும், ஆழமாக சிந்திக்கும் திறனும் பெற்றிருந்தார் கலிலி. அவருக்கு பதினேழு வயதானபோது பிசா (University of Pisa) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதமும், இயற்பியலும் கற்றார். அப்போது அந்த பல்கலைக்கழகத்தில் அவர்தான் அதிகமான கேள்விகள் கேட்ட மாணவராக இருந்திருப்பார். கற்பிக்கப்பட்ட அறிவியல் கருத்துகளை மற்ற மாணவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள, கலிலி மட்டும் அதற்கான ஆதாரங்களை கேட்பார். உதாரணத்திற்கு வெவ்வேறு எடையுடைய இரண்டு பொருட்களை உயரத்திலிருந்து கீழே போட்டால் அதிக எடையுடைய பொருள் முதலிலும், லேசான பொருள் பின்னரும் தரையில் விழும் என்று கற்பிக்கப்பட்டது.

அரிஸ்டாட்டில் கூறியிருந்த அந்த கருத்தை அப்படியே கற்பித்து வந்தன பல்கலைக்கழகங்கள். ஆனால் விஞ்ஞான கருத்து எதையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கபட்டிருக்க வேண்டும் என்று நம்பிய கலிலி அரிஸ்டாட்டிலின் கூற்றை மறுத்தார். அதனால் ஆசிரியர்களின் கண்டனத்திற்கு ஆளானார். பின்னர் பட்டம் பெற்ற பிறகு தமது 25-ஆவது வயதில் அதே பல்கலைக்கழகத்தில் கணித ஆசிரியராக சேர்ந்தார். மாணவனாக இருந்து செய்ய முடியாததை ஆசிரியராக இருந்து செய்வோம் என்று தீர்மானித்த அவர் அரிஸ்டாட்டிலின் கூற்றை பொய் என்று நிரூபிக்க விரும்பினார். நிறைய பார்வையாளர்களை அழைத்து பிசாவின் சாய்ந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று இருவேறு எடையுடைய இரண்டு உலோக குண்டுகளை ஒரே நேரத்தில் கீழே போட்டார். இரண்டு குண்டுகளும் ஒரே நேரத்தில் சமமாக தரையில் விழுந்தன.

வானியல் ஆய்வு
ஓர் எளிய அறிவியல் உண்மையை கண்கூடாக கண்டபோதும் கூடியிருந்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றும், இயற்கைக்கு மாறானது என்றும் கூறி நம்ப மறுத்தனர் கலிலியை மந்திரக்காரன் என்று மறுதலித்தனர். அதன்பிறகு கலிலியோவால் பிசா பல்கலைகழகத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.  University of Padua பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சேர்ந்தார். வானியல் ஆய்வில் அதிகம் ஆர்வம் கொண்ட கலிலி 1609-ஆம் ஆண்டில் telescope எனப்படும் உலகின் முதல் தொலைநோக்கியை உருவாக்கினார். அதைக்கொண்டு தினமும் விண்வெளியை ஆய்வு செய்தார். அதன்பலனாக விண்வெளியில் அதிசயிதக்க பல கண்டுபிடிப்புகளை செய்தார். முதலில் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தை கண்டுபிடித்தார். பின்னர் வியாழன் கோளுக்கு நான்கு துணைக்கோள்கள் அதாவது நான்கு நிலாக்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து சொன்னார்.

சூரியனில் கரும்புள்ளிகள் தெரிவதையும் அவர் கண்டார். அந்தப்புள்ளிகள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபோது அவை சூரியனை சுற்றும் கிரகங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தார். சூரியனை சுற்றியே அனைத்தும் சுழல்கின்றன என்ற தனது கருத்தை அதன்மூலம்தான் உறுதி செய்தார் கலிலி. ஏற்கனவே Copernicus அறிந்து சொன்ன கருத்துதான் அது என்றாலும் அதற்கான ஆதாரத்தை கண்டு சொன்னவர் கலிலிதான். அந்தக்கருத்தை சிலர் ஏற்றாலும், கேள்வி கேட்பதே தவறு என்று வாழ்ந்த பழமைவாதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அது பைபிள் கருத்துக்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவ சமூகமும் கலிலியோவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. கலிலி கடவுளை மறுப்பவர் என்றும், சூனியக்காரர் என்றும்கூட பட்டம் கட்டியது ரோமன் கத்தோலிக்க தேவாலயம்.

அந்தக்காலகட்டத்தில் சர்வ வல்லமை பெற்றிருந்தன தேவாலாயங்கள். நாட்டை அரசன் ஆண்டாலும் அந்த அரசனையும் ஆளும் வல்லமை தேவாலாயங்களுக்கு இருந்தன. 1615-ஆம் ஆண்டில் கலிலியோ தமது கண்டுபிடிப்புகளையும், சூரியன்தான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்ற கருத்தையும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். புனித தேவாலாயத்திற்கு எதிராக செயல்பட்டார் என்றுகூறி கலிலியோவை கைது செய்தனர் தேவாலாய அதிகாரிகள். தன்னுடைய கருத்துகள் தவறானவை என்று ஒப்புக்கொள்ளும்படி கலிலி வற்புறுத்தப்பட்டார். தன் உயிருக்கே ஆபத்து என்று உணர்ந்த கலிலி வேறு வழியில்லாமல் தன் கூற்று தவறு என்று உதட்டளவில் ஒப்புக்கொண்டார். பின்னர் பிரான்ஸுக்கு குடிபெயர்ந்த கலிலி தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆண்டு செல்ல செல்ல பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்ற கருத்தில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது.

வானியல் சாஸ்திரத்தின் தந்தை
ப்ளோரன்ஸ் (Florence) நகர அதிகாரிகளின் அனுமதியோடு 1632-ஆம் ஆண்டில் அவர் மற்றொரு புத்தகத்தை வெளியிட்டார். மீண்டும் தேவாலயத்தை அவமதிக்கிறார் என்றுகூறி ரோம் நகர உயரதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்தனர் இம்முறை விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அவரை வீட்டுக்காவலில் வைத்தனர் அப்போது அவருக்கு வயது 68. பத்து ஆண்டுகள் வீட்டுக்காவலிலேயே காலம் கழித்த கலிலி 1642-ஆம் ஆண்டு தமது 78-ஆவது அகவையில் காலமானார். அவர் இறந்த பிறகு அவரது ஆராய்ச்சிகளையும், கண்டறிந்த உண்மைகளையும் உள்ளடக்கிய புத்தகம் ஐரோப்பா முழுவது வலம் வந்து பழமைவாதத்தில் சிக்காத சிலரின் அறிவுக்கண்ணை திறந்தது. கண்கூடாக காணும் வரை அல்லது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கபடும் வரை எதையுமே ஏற்றுக்கொள்ளாத மனோபாவம்தான் உலகம் வியக்கும் கண்டுபிடிப்புகளை செய்ய கலிலிக்கு உதவியிருக்கிறது. 'வானியல் சாஸ்திரத்தின் தந்தை' என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத்தந்திருக்கிறது.

உண்மை என்று நம்ப படுபவைகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்  என்ற அவசியம் கிடையாது. சந்தேகம் இருந்தாலும் துணிந்து கேட்கலாம் அது பொய் என்று தெரிந்தாலும் தைரியமாக சொல்லலாம். கலிலியோ போல் கேள்வி கேட்க துணிபவர்களுக்கும், புதிய உண்மைகளை கண்டுபிடிக்க முனைவர்களுக்கும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைப்பவருக்கும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.