பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் இறந்த தினம்: 9-11-1988

#history #Actor
பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் இறந்த தினம்: 9-11-1988

தேங்காய் சீனிவாசன், 1970-1980-களில் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர். இவர் 'கல் மணம்' என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் இவர், தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

தேங்காய் ஸ்ரீநிவாசன், சென்னையைச் சேர்ந்த ராஜவேல் முதலியார் என்பவருக்கும், தூத்துக்குடியிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார். அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில் அறிமுகமானார்.
    
அதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவர் கே. கண்ணனின் 'கல் மணம்' நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கூறினார். பின்னர் அவ்வாறே அழைக்கப்பட்டார். தேங்காய் ஸ்ரீநிவாசன், ஒரு விரல் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.

இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

தேங்காய் ஸ்ரீநிவாசன் தன்னுடைய உறவினரின் ஈமச் சடங்கிற்காக பெங்களூருவிற்குச் சென்றபோது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி, 51-ம் அகவையில் 1988-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் உயிரிழந்தார்.