மிங்க் வகை கீரிகளுக்கு கரோனா தடுப்பூசி :பின்லாந்து அரசு முடிவு

மிங்க் வகை கீரிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த பின்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
டென்மார்க், பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது மிங்க் வகை விலங்குகள். இவை சாதுவான உயிரினம். இவற்றின் அடர்த்தியான ரோமத்தைக் கொண்டு குளிருக்கு இதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
கரோனா உலகளவில் பரவ ஆரம்பித்தபோது மிங்க் விலங்குகளிடமிருந்து புதுவகை கரோனா வைரஸ் உருவாக வாய்ப்பிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இதனையடுத்து, மிங்க் அழிப்பு தொடங்கியது. டென்மார்க் ஃபர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறிக்கையின்படி 3-ல் 2 பங்கு மிங்குகள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் டென்மார்க் அரசு கடும் கண்டனங்களைப் பெற்றது.
இந்நிலையில், அண்டை நாடாக பின்லாந்து மிங்குகளுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் சோதனை முயற்சியாக மிங்க் விலங்குகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டின் ஃபர் தொழில்சாலைகளின் கோரிக்கையை ஏற்று இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசி தயாராக இருப்பதாகவும் பின்லாந்தில் உள்ள அனைத்து மிங்க் விலங்குகளுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட இது போதுமானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே பின்லாந்தில் தான் கரோனா குறைந்தளவில் பதிவாகியுள்ளது. ஆனால், அங்கு மிங்குகளுக்கு கரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. அதனாலேயே பின்லாந்து அரசு தனது கவனத்தை மிங்குகளை நோக்கி திருப்பியுள்ளது.



