சுவிஸில் கோவிட் நிலைமைகளில் முன்னேற்றம்,புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிப்பு!

சுவிட்சர்லாந்தில் கோவிட் பெருந்தொற்று நிலைமைகளில் முன்னேற்றம் பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவருகின்றது.
இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்குமா என்பதனை அவதானிக்க வேண்டுமென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் மாத ஆரம்பத்தில் நாளாந்த நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை மூவாயிரமாக காணப்பட்டதுடன் நேற்றைய தினம் இது 1632 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ஒருலட்சம் பேருக்கு 390 காணப்பட்ட தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தற்பொழுது ஒரு லட்சம் பேருக்கு 290 ஆக குறைவடைந்துள்ளது.
மேலும், கோவிட் பெருந்தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 27 வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கோடை விடுமுறை நிறைவினால் நாட்டுக்குள் நோய்த் தொற்றை காவி வருவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியும், தடுப்பூசி ஏற்றுகையுமே நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சிக்கான பிரதான ஏதுக்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு கோவிட் ஆபத்து குறைவு என ஜெனிவாவில் அமைந்துள்ள Institute for Global Health நிறுவனத்தின் பணிப்பாளர் Antoine Flahault, தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையின் வீழ்ச்சியானது சுவிட்சர்லாந்திலிருந்து கோவிட் தொற்று ஒழிக்கப்படுவதாக அர்த்தப்படாது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வைரஸ் தொற்று தொடர்ந்தும் விரியத்துடன் இருப்பதாக கான்டன்கள் மருத்துவர் பேரவையின் தலைவர் Rudolf Hauri தெரிவிக்கின்றார்.
கோவிட் நான்காம் அலை முற்று முழுதாக நீங்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் இதேவிதமான ஓர் நிலைமை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை குறைந்து மீண்டும் அதிகரித்திருந்தது.
குளிர்காலத்தில் நிலைமைகள் மேலும் மோசமடையக் கூடும் எனவும், தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் நோயத் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வினை கட்டுப்படுத்த முடியும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இற்றை வரையில் சுவிட்சர்லாந்தில் 54.39 வீதமானவர்களுக்கு முழு அளவில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.



