கியூபா தயாரித்த கொவிட்-19 தடுப்பூசிக்கு வியட்னாம் அனுமதி

#Covid Vaccine
Keerthi
2 years ago
கியூபா தயாரித்த கொவிட்-19 தடுப்பூசிக்கு வியட்னாம் அனுமதி

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிட்டுள்ளதோடு கியூபா நாட்டிலிருந்து அப்டலா தடுப்பூசியை இறக்குமதி செய்துள்ளது.

உலகின் 5 கம்யூனிஸ தேசங்களில் வியட்நாமும் ஒன்று. சீனா, வட கொரியா, லாவோஸ், கியூபா வரிசையில் வியட்நாமும் இருக்கிறது.
வியட்நாம் மக்கள் தொகை மொத்தம் 9.8 கோடி தான். ஆனால் அங்கு இதுவரை மொத்த மக்கள் தொகையில் 6.3% பேருக்கு மட்டுமே இரண்டு தவணைகள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அங்கு டெல்டா வைரஸால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 667,650 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 16.637 பேர் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு தற்போது தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வியட்நாம் அதிபர் நிகுவென் சுவான் புச் கியூபாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்துக்கு முன்னதாக அவர், கியூபாவின் சொந்தத் தயாரிப்பான அப்டலா தடுப்பூசியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்தார். தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலேயே வியட்நாமில் தான் கொரோனா தடுப்பூசி மிகமிகக் குறைந்த அளவில் செலுத்தப்பட்டுள்ளது. வியட்நாம் இதுவரை 8 விதமான இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகிறது.

உலகளவில் கொரோனாவுக்கு எதிராக பைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக் V, சைனோவாக், சைனோஃபார்ம், கோவாக்சின், கோவிஷீல்டு, கியூபாவின் அப்டலா எனப் பல விதமான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

உலகளவில் இதுவரை 5.5 பில்லியனுக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனா தனது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 71% க்கும் அதிகமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருக்கிறது.

அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திவருகின்றனர். இஸ்ரேலும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தி வருகிறது.

கியூப நாட்டில் 2 வயது முதல் 10 வயதிலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே 2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கியூபா சாதனை செய்திருக்கிறது.