நிந்தவூர் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு!
நிந்தவூரில் நீண்டகாலமாக விவசாயிகளால் முன்வைக்கப்பட்டு வந்த நெல் களஞ்சியசாலை தேவைக்கு தீர்வு காணும் வகையில், நெல் களஞ்சியசாலை புனரமைப்பு பணிகள் இன்று (15.09.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப் தலைமையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான A. ஆதம்பாவா பிரதம அதிதியாகவும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி A.L. றியாஸ் ஆதம் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
நிந்தவூர் விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு, நெல் களஞ்சியசாலையின் அவசியம் தொடர்பில் நீண்டகாலமாக பல்வேறு மட்டங்களில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தவிசாளர் றியாஸ் ஆதம் தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உள்ளிட்ட பலரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் A. ஆதம்பாவா அவர்களும் இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை நிந்தவூர் விவசாயிகளின் நீண்டகால தேவைக்கு கிடைத்துள்ள முக்கிய தீர்வாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், விவசாயத் துறை அதிகாரிகள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.