பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்த அன்வர் எம். முஸ்தபா – கிழக்கு அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீரை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகள், சமூக நல்லிணக்கம் மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், மாளிகைக்காடு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் மையவாடி தொடர்பான தேவைகள் மற்றும் பிரதேச மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் அன்வர் எம். முஸ்தபா உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அத்துடன், இலங்கை–பாகிஸ்தான் இடையிலான நீண்டகால நட்புறவு, இருதரப்பு ஒத்துழைப்பு, கல்வி மற்றும் கலாசார பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்த விடயங்களில் சர்வதேச நட்புறவுகளின் ஊடாக ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே