அஸ்வெசும நிவாரணம் தற்போது அதிக வறிய மற்றும் வறிய பிரிவுகளுக்கு மாத்திரம்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை, கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளதாக இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ வழங்கிய பதிலிலேயே இந்தத் தகவல் வெளியானது.
அஸ்வெசும நிவாரணத்தை குறைப்பதற்கு உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகள் காரணமாக அமைந்ததா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், அஸ்வெசும வேலைத்திட்டம் 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், சட்டத்தின் பிரகாரம் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதே குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை 24,39,917 ஆக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அது 12,51,522 ஆகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் முன்னதாக அதிவறிய, வறிய, பாதிப்புக்குள்ளாகக்கூடிய மற்றும் இடைக்கால என நான்கு பிரிவுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில், இடைக்காலப் பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திலும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்திலும் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தற்போது அதிவறிய மற்றும் வறிய ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரமே அஸ்வெசும நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அஸ்வெசும திட்டத்தின் பயனாளிகள் தொடர்பான மீளாய்வுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை இந்த மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே