வடமேற்கு கேமரூனில் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்ட ஆசிரியர்கள்
கேமரூனின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு காவலரைக் கொன்று ஐந்து ஆசிரியர்களைக் கடத்திச் சென்றவர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருவதாக அந்தப் பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பாமெண்டா நகரிலிருந்து வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் உள்ள 'வும்' (Wum) நகரில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி மையத்திற்குள், ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்ததாக, அந்தப் பிராந்திய ஆளுநர் அடோல்ஃப் லெலே லாஃப்ரிக் (Adolphe Lele Lafrique) தெரிவித்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் அத்தாக்குதலைத் தடுக்க முயன்றார். "ஆயுதமேந்திய அந்தக் கும்பல் அவர் மீது சரமாரியாகச் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவர்கள் ஐந்து ஆசிரியர்களைத் தங்களுடன் அறியப்படாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர்" என்று லாஃப்ரிக் குறிப்பிட்டுள்ளார்.
கேமரூனில் ஆங்கிலம் பேசும் மக்கள் வசிக்கும் இரண்டு பிராந்தியங்களில் வடமேற்குப் பகுதியும் ஒன்றாகும்; இப்பகுதிகளில் பிரிவினைவாதக் குழுக்கள் கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் படைகளை எதிர்த்துப் போராடி வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே