இஸ்ரேல் வேலைவாய்ப்பு கனவுகளையும் வேலைவாய்ப்பு மாபியா சீரழித்துள்ளது – சஜித்
நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பு மாபியா காரணமாக இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெறும் எதிர்பார்ப்பில் இருந்த பலரின் கனவுகளும் கலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் கொள்கை பலவீனமாக இருப்பதுடன், இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளும் செயல்திறனற்ற நிலையில் காணப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இன்று (08) இஸ்ரேலிய உட்கட்டமைப்புத் துறை வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை சந்தித்து கலந்துரையாடிய போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக 560 பேர் காத்திருப்பதாகவும், மேலும் 1,200 பேர் உட்கட்டமைப்புத் துறை லொட்டரி முறையின் கீழ் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் ஊடாக இஸ்ரேல் வேலைவாய்ப்பை பெறுவதற்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், தனியார் வழியாக செல்லும் போது சுமார் 35 இலட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் இந்த நடவடிக்கையில் இடம்பெறும் சுரண்டல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக தான் குரல் கொடுப்பதாகவும், இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்திலும் முன்வைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், இந்த சுரண்டல் முறையை ஒழித்து, குறைந்த செலவில் இஸ்ரேலுக்கு செல்லக்கூடிய வேலைவாய்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே