கொழும்பு சீனப் பிரஜை கொலை வழக்கு – சிகிரியாவில் இரு சீனர்கள் சிக்கினர்
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் மூன்று சீனப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சிகிரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் சிகிரியாவில் உள்ள உணவகம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீனப் பிரஜை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவரது சடலம் எஹெலியகொட பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீனப் பிரஜைகளைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் முன்னதாக கோரியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே