கண்டி தலதா பெரஹெரா வெற்றிகரமாக நிறைவு – ஜனாதிபதியிடம் இறுதி அறிக்கை கையளிப்பு
கண்டி, ஆகஸ்ட் 29: கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு மகா தேவாலயங்களின் வருடாந்த எசல பெரஹெரா வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, அது தொடர்பான சம்பிரதாய அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கை ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல உள்ளிட்ட நான்கு மகா தேவாலயங்களின் நிலமேமார்களால கண்டி ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெரஹெராவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு ஜனாதிபதியால் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டதுடன், எசல பெரஹெரா நிதியத்தின் ஊடாக தொலைதூர தேவாலயங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், மத்திய மாகாண கலாசார திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “பூஜனிய தலதா சங்ஸ்க்ருத்திய” நூலின் முதல் பிரதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தலதா பெரஹெரா இலங்கையின் பௌத்த மற்றும் கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாக விளங்குவதாக குறிப்பிட்டார். மேலும், பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தை பாதுகாப்பதுடன், நாட்டில் வலுவான கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தலதா பெரஹெரா போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வுகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் பெரஹெராவை நிறுத்துவது தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டின் இளைஞர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதுடன், மனிதநேயம், கலாசார பாரம்பரியம், வரலாறு மற்றும் கருணை போன்ற விழுமியங்களை சமூகத்தில் மீண்டும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி டி.கே. ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே