தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் பேச்சு
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்று, வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு, தமிழர் தாயகப் பகுதிகளில் காணி, அபிவிருத்தி மற்றும் ஆளுகை தொடர்பான சவால்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு நீடித்ததும் நீதியானதுமான அரசியல் தீர்வு அவசியம் என்பதையும், அரசியலமைப்பின் அடிப்படையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் வாழ்வாதாரச் சவால்கள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஜனநாயக ஆளுகையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது, இலங்கைத் தமிழ் மக்களின் நலன், அரசியல் உரிமைகள் மற்றும் கண்ணியமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகள் மதிக்கப்படுவதும், நீடித்த சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு விரைவில் எட்டப்படுவதும் காலத்தின் தேவையாகும் எனவும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே