ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்திப்பு: காணி, அரசியலமைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்
தமிழ் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியைச் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பில் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன், தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அவற்றில் முதன்மையாக புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், புதிய அரசியலமைப்பு அவசியம் என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதுடன், அதற்கான நடவடிக்கைகளுக்காக சிறிது கால அவகாசம் வழங்குமாறு கோரியதாகவும் அவர் கூறினார்.
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தியதாகவும், அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தெரிவுக்குழு அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
எனினும், அந்த அறிக்கை காலதாமதத்தை மட்டுமே ஏற்படுத்தும் என தாங்கள் சுட்டிக்காட்டியதாகவும், இதுதொடர்பாக அதே நாளில் தெரிவுக்குழுவுடனும் ஜனாதிபதி கலந்துரையாடுவதாக தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் காணி பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அந்தக் காணிகளை விடுவிக்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருப்பதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே