ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தண்டிக்கப்படவே இல்லை - விமல் கொந்தளிப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்க தவறியதற்காக பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை என்றால் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புக் கொண்டிருந்த இப்ராஹிமிற்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
எவ்வித அனுபவமும் இல்லாதவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைத்ததால் நாடு இன்று சகல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியதாக தகவல்கள் கிடைத்தும் தாக்குதலை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அடிப்படையில் தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதலை தடுக்க தவறியதற்காக பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை என்றால் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புக் கொண்டிருந்த இப்ராஹிமிற்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்.
குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட இரண்டு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் முன்கூட்டியே தாக்குதல்கள் தொடர்பில் நன்கு அறிந்துள்ளார். இதனை அவரது வீட்டின் பணிப்பெண் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்.இவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ்மா அதிபராக நியமிக்குமாறு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தினார். இதனை அவரால் ஒருபோதும் மறுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே