நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!!
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை காரணமாக, இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார, தற்போது பல மாவட்டங்களில் கணிசமான நீர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் தற்போது 40 சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் ஓகஸ்ட் மாதம் மற்றும் தற்போது நிலவும் 'எல் நினோ' நிலைமையினால் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் ஆவியாகி கணிசமான அளவு இழக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய பணிப்பாளர், மீண்டும் மழை பெய்யும் வரை நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை மிகவும் அவதானமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
எனவே, நீர் வீணாகாமல் பயன்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் தற்போதைய வறட்சியான வானிலையை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்றும் சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே