வெலிக்கடை சிறை படுகொலை: குட்டிமணி - தங்கத்துரைக்கு வல்வெட்டித்துறையில் சிலை!
1982ஆம் ஆண்டு இலங்கை நீதிமன்றத்தால் தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது, செல்வராஜா யோகச்சந்திரன் (குட்டிமணி) தனது இறுதி ஆசையாக ஒரு கோரிக்கையை வைத்தார்.
"தனது கண்களைத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பொருத்த வேண்டும்; அதன் மூலமாவது மலரப்போகும் சுதந்திர தமிழீழத்தை தான் பார்க்க முடியும்" என்று அவர் முழங்கினார்.
1983 ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வெலிக்கடை சிறையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதலின் போது, குட்டிமணி மற்றும் நடராஜா தங்கத்துரை உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
நீதிமன்றத்தில் குட்டிமணி பேசியதற்குப் பழிவாங்கும் நோக்கில், அவரது கண்கள் பிடுங்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார் என்பது போராட்ட வரலாற்றின் ஆறாத வடுவாகும்.
போராட்டத்தின் தொட்டில்: வல்வெட்டித்துறை (VVT) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதொரு நிலப்பரப்பாகும். குட்டிமணி, தங்கத்துரை, பிறந்த வீரமண்ணாக வல்வெட்டித்துறை பார்க்கப்படுகிறது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஆரம்பகாலத் தலைவர்களாக விளங்கிய குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் சிலைகள், அவர்களது சொந்த மண்ணிலேயே நிறுவப்படுவது அரசியல் மற்றும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
சிவாஜிலிங்கத்தின் தொடர் முயற்சி: வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம், இந்தச் சிலைகளை நிறுவுவதற்காக நீண்டகாலமாகத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
1983 ஜூலை 23 அன்று ஆரம்பமான 'கறுப்பு ஜூலை' இனப்படுகொலையின் 43ஆம் ஆண்டு நினைவு வாரத்தை ஒட்டி, சரியாக அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜூலை 25ஆம் திகதியன்று (25.07.2026) இந்தத் திருவுருவச் சிலைகள் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே