நீதியமைச்சர் பதவி விலக வேண்டும்!! இல்லையேல் சிறைக் கலவரம் தொடர்பில் நியாயமான விசாரணை நடைபெறாது!!
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் பொறுப்புடைய அமைச்சரை பதவிநீக்கம் செய்யாமல் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கான மாற்றுத் திட்டங்களை விடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசு எடுத்து வரும் தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் தகுதியான அரச அதிகாரிகளின் முறையற்ற இடமாற்றங்கள் காரணமாக ஒட்டுமொத்த அரச பொறிமுறையும் பாரிய வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சாடியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.
நான் பிரதி அமைச்சராக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் இணைந்து, அந்த சிறைச்சாலை வளாகத்தை இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வந்தோம். கண்டி நகரின் மத்தியில் மிகவும் அழகான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சூழலில் அது அமைந்துள்ளது.
சிறைச்சாலைகளை அதிகரிப்பதுதான் இவர்களது கொள்கையா? இவர்களது கொள்கை சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதாகவே இருக்க வேண்டும். நாட்டுக்கு பொருத்தமான, வணிக ரீதியான, சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கக்கூடிய இடங்களை இவ்வாறான அபிவிருத்திகளுக்குப் பயன்படுத்த வேண்டும்;.
சிறைச்சாலைகள் தேவையென்றால் அதற்கு வேறு பொருத்தமான இடங்களைக் கண்டறிய முடியும். எனவே, இலங்கை முதலீட்டுச் சபையினால் உள்வாங்கப்பட்டு, பெருந்தொகை பணம் செலவழிக்கப்பட்டு புதிய முதலீட்டுக்காகத் தயார்படுத்தப்பட்ட பழைய போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு நான் எனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே