சிறைக் கலவரத்திற்கு பொறுப்பேற்றார் நீதியமைச்சர் : CIDயின் விசாரணைகள் ஆரம்பம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த கொடூரமான மோதல் குறித்து கொழும்பு குற்றப் பிரிவு (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஆகியவை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னரே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறை வளாகத்திற்குள் நிகழ்ந்த வன்முறைச் சூழல்களை ஆராய்ந்து, அதற்குக் காரணமானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறை மோதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் ஏழு சிறை அதிகாரிகளும் 19 கைதிகளும் அடங்குவதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், 23 சிறை அதிகாரிகளும் 54 கைதிகளும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கலவரத்தின்போது சிறைச்சாலையில் இருந்த சிசிடிவி அமைப்புகளும், உடல் ஸ்கேனரும் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறை மோதலில் ஈடுபட்ட கைதிகளின் முதன்மை நோக்கம் சிறை நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதாகத் தெரிகிறது எனக் கூறிய அமைச்சர், தனது அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு நிறுவனத்திற்குள் இச்சம்பவம் நிகழ்ந்ததால், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஊடகங்களிடம் பேசிய நீதி அமைச்சர், தற்போது அமைதியின்மை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆனால் எந்தவொரு உயிர் இழப்பையும் நியாயப்படுத்த முடியாது என்றும், வலியுறுத்தினார்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே