ஜனாதிபதி செயலகத்திற்கே இந்த நிலையா?" - நாட்டின் ஏனைய பகுதிகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கேள்வி
நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களைச் சுற்றி முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை போன்ற உயர் பாதுகாப்பு வலயங்களைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள், டெங்கு நெருக்கடி பெருந்தொற்று நிலையை எட்டிய பின்னரே முன்னெடுக்கப்படுவதாகவும், இது அதிகாரிகளின் தாமதமான செயல்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த ஆண்டில் இதுவரை 50,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சுகாதார அதிகாரிகளும் இது பெருந்தொற்று நிலை என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தூய்மைப்படுத்தும் பணி தேவைப்படுகிறது என்றால், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பொது சுகாதாரத்தின் நிலை என்ன என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், அரசாங்கத்தின் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் வெறும் விளம்பரப் பிரசாரங்களாகவோ அல்லது முக்கிய அரச நிறுவனங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட செயல்களாகவோ இருக்கக்கூடாது என வலியுறுத்திய அவர், நிலைமை பாரதூரமாவதற்கு முன்னரே அரசாங்கம் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டம், உள்ளூராட்சி மன்றம் மற்றும் சமூக மட்டங்களை உள்ளடக்கிய நீடித்த தேசிய வேலைத்திட்டம் அவசியமானது.
சுகாதார அமைச்சரும் ஊடக அமைச்சருமானவர், விளம்பரப் பணிகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணி வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதிலும், சுகாதாரப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இறுதியாக, "அரசாங்கம் வெறும் விளம்பர நடவடிக்கைகளைக் கடந்து, மக்களைப் பாதிக்கும் இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில் உண்மையான மற்றும் விரிவான தேசிய டெங்கு தடுப்பு உத்தியை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றும் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே