செம்மணி புதைகுழி விவகாரம்: எமது ஆட்சியில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் - அமைச்சர் ஹர்சன நாணயக்கார!
எமது அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார உறுதிபட தெரிவித்தார்.
இராணுவ உயர் அதிகாரி பிழை விட்டு இருந்தால் அதற்கான ஆதாரங்களை யாரும் சமர்ப்பிப்பதாக இருந்தால் அதனை முன்னெடுத்து சரியான விசாரணைகளை செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்ட பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நீதியமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தற்போது நடந்து வருகிறது.
ஆகவே தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். இதில் உள்ள எலும்புக்கூடுகள் பற்றி யாருக்காவது தெரிந்து இருந்தால் அவர்கள் இதனை வெளிப்படுத்த முன் வர வேண்டும். இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை நான் சிறைச்சாலையில் சந்தித்தேன். அப்பொழுது அவர் தன்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறும் தான் இதில் உள்ள விடயங்களை சொல்வதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் கிடையாது. காணாமல் போனோர் பற்றி அலுவலக முறைமையை கைவிட்டால் நீதியை செய்வதற்கான வழிமுறை கிடையாது. பழ கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை ஒரு கண்துடைப்பாக வைத்திருந்தார்கள்.
ஆனால் எங்கள் ஆட்சி காலத்தில் தேவையான நிதியை ஒதுக்கி இருக்கின்றோம். காணாமல் போன அலுவலகத்தைக் கொண்டு இதனை செய்ய வேண்டும். சகல விடயங்களை நாம் செய்து கொடுத்துள்ளோம். செய்யவில்லை என நீங்கள் நிரூபித்தால் அதற்கு நாங்கள் பதில் கூற தயார். கடந்த காலங்களில் காணாமல் போன அலுவலகத்தை உருவாக்கிவிட்டு அதற்கான வசதி வாய்ப்புகள் செய்யப்படவில்லை.
ஆனால் தற்போது சகல வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. பழைய அரசாங்கத்தை வைத்துக்கொண்டு எமது அரசாங்கத்தை பார்க்க வேண்டாம். நீதியை நிலை நாட்டுவேன்.
எல்லோரையும் சிறைக்குள் அடைப்பதால் இதனை செய்ய முடியாது. கட்டாயம் இதற்கான நீதியை நிலைநாட்டுவேன். எமது அரசாங்க காலத்தில் இதனை எந்த பிரச்சனையும் இல்லாமல் நாம் கொண்டு செல்வோம். முன்னைய காலத்தில் இதேபோன்று யாரும் செய்யவில்லை.
எமது அரசாங்கம் இதனை நிச்சயம் செய்யும்.இதில் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. நீதி நிச்சயமாக நிலை நாட்டப்படும். யாராவது ஒருவருக்கு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அதற்கு சான்றுகள் தேவை.
சும்மா ஒன்றை கூற முடியாது. வெளியில் இருந்து எதையும் கதைக்க முடியும். ஆதாரங்களை முன்வைத்தால் அதனை செய்ய நாம் தயார் - என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே