செம்மணியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புகளை சர்வதேச ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் - சுமந்திரன்!

#SriLanka #M. A. Sumanthiran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Semmani human burial
Thamilini
1 hour ago
செம்மணியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புகளை சர்வதேச ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் - சுமந்திரன்!

“செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகளை, அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு கடந்தும், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.” என  ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 

இலங்கையிலேயே அதிக எண்ணிக்கையான என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழியாகச் செம்மணி உருவெடுத்துள்ளது.

செம்மணியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு இன்னும் பல பகுதிகள் எஞ்சியுள்ளன. இங்கு வெறுமனே ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் எனப் பலரது என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

 இதன் மூலம், இங்கு மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டு, திட்டமிட்டுப் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாக நிரூபணமாகின்றது. எனவே, இதுவொரு சாதாரண மனிதப் புதைகுழி அல்ல.

 கடந்த 1998ஆம் ஆண்டு இராணுவ வீரர் ஒருவர், இந்தச் செம்மணிப் பகுதியில் 300 முதல் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, அப்போது முதற்கட்ட அகழ்வுகள் இடம்பெற்றன. அதன்போது 15 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டதில் இரண்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டன.

 அதேபோன்றே, தற்போது அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளையும் அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேசப் பல்கலைக்கழகங்களுக்கு அல்லது சர்வதேசத் தரம் வாய்ந்த ஆய்வகங்களுக்கு அனுப்பக் கோரியிருந்தோம். நீதிமன்றமும் அதற்கான உத்தரவை வழங்கியிருந்தது.

 என்புத் தொகுதிகளைத் தோண்டி எடுப்பது என்பது ஆரம்பகட்ட வேலை மட்டுமே. ஆனால், அவை யாருடையவை என்பதை அடையாளம் காண்பதே மிக முக்கியமானது. துரதிர்ஷ்டவசமாக, அதற்கான பணிகள் ஓராண்டாகியும் இன்னும் முடக்கப்பட்டுள்ளன.

 இலங்கையில் என்புத் தொகுதிகளை மரபணு சோதனை மூலம் ஆராய்வதற்கான போதிய நிபுணத்துவம் இல்லை என்றால், நாம் சர்வதேச நிபுணத்துவத்தை நாடுவோம் என்று தற்போதைய நீதி அமைச்சர் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.

 அவர் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து, செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடவுள்ளார். எனவே, இந்த விடயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் யாருடையவை என்பது கண்டறியப்பட்டு, இந்த கொடூரக் குற்றங்களுக்குக் காரணமானவர்களுக்கு எதிராகத் தாமதமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4