சுங்க நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்க EDB மற்றும் சுங்கத் திணைக்களம் திட்டம்!
2026–2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை (NEDP) செயல்படுத்துவதற்கு இணையாக, சுங்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில், ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்காக சுங்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஏற்றுமதி கொள்கலன்களைப் பரிசோதிக்கும் Export Facilitation Centre இன் கொள்ளளவு, வசதிகள் மற்றும் நவீனமயப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு, ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் இலகுவாக ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது இலங்கை சுங்கத்திற்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், நாடு பூராகவும் உள்ள ஏற்றுமதியாளர்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஏற்றுமதித் துறையில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது சுங்கத்தின் கைத்தொழில் வசதிகள் பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் TIEP Temporary Import for Export Processing செயல்முறையை மீண்டும் மீளாய்வு செய்து, இதுவரையில் ஏற்றுமதியில் ஈடுபடாத சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஏற்றுமதியில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றின் அவசியத்தையும் ஜனாதிபதியின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.
ஏற்றுமதித் துறையை விரிவுபடுத்தும்போது, சுங்க நடவடிக்கைகளை பரவலாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பகுதியில் சுங்க ஏற்றுமதி மத்திய நிலையமொன்றை செயற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
e-commerce ஊடாக ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஏற்பட்டுள்ள தடைகளை நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், தபால் திணைக்களத்துடன் இணைந்து அந்த நடவடிக்கைகளை முறைமைப்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி அது தொடர்பான ஆவணங்களைத் தயாரிப்பதை விரைவுபடுத்துவதன் மூலம் அதற்கான நேரத்தையும் செலவையும் குறைப்பது குறித்தும், அபாய மதிப்பீட்டின் மூலம் குறைந்த அபாயங்களைக் கொண்ட ஏற்றுமதியாளர்களுக்கு அதிக வசதிகளை வழங்கும் நடைமுறையொன்றைச் செயல்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவின் தலைமையில், சுங்கம், ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாதந்தோறும் கூடி, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாண்பது குறித்துக் கலந்துரையாடுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தேசிய தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற இலக்குமயப்பட்டதும் யதார்த்தமானதுமான ஏற்றுமதி வருமான இலக்கை அடைவதற்கு தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க, இலங்கை சுங்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகங்களான டி. லோகநாதன், எல்.கே.எஸ்.டி.கே. அரேவத்த, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் கலாநிதி சஞ்சீவ ரத்னசேகர, ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் டபிள்யூ.எல்.சி. திலகசிறி ஆகியோருடன் இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே