முதலமைச்சர் விஜய் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய மதுரை யாசகர்!
இல்லற வாழ்க்கையின் கடமைகளை முடித்து, மனைவியின் மறைவுக்குப் பின் வீட்டை விட்டு வெளியேறி யாசகம் பெற்று வரும் 75 வயது முதியவர் ஒருவர், தான் கையேந்திப் பெற்ற 1.60 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் சமூக நலனுக்காகவும் தமிழக அரசுக்கும் வாரி வழங்கிய நெகிழ்ச்சியூட்டும் விபரங்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் உப அலுவலகத்திற்கு உட்பட்ட ஆங்கினார் கிராமத்தைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன் (75). ஆரம்பத்தில் மும்பையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பிள்ளைகளின் திருமணக் கடமைகளை முடித்து, இல்லற வாழ்க்கையை முழுமையாக நிறைவு செய்த நிலையில், தனது மனைவியின் மறைவுக்குப் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.
அன்றிலிருந்து யாசகம் பெறத் தொடங்கிய அவர், தனது சொந்தத் தேவைகளை மிகச் சுருக்கிக்கொண்டு, யாசகம் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் சமூக நலப் பணிகளுக்காகச் செலவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 40 அரசுப் பள்ளிகளுக்கு நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் போன்ற அடிப்படை வசதிகளைத் தனது சொந்தப் பணத்தில் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்.
கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது மதுரையில் தங்கியிருந்த பூல் பாண்டியன், ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் வீதம், 10 மாதங்களில் மொத்தம் 1 இலட்சம் ரூபாயை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.
அவரது இந்த உன்னத செயலைப் பாராட்டி, அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், சுதந்திர தின விழாவில் அவருக்குச் சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார். தமிழக வரலாற்றில் யாசகர் ஒருவர் அரசு விழாவில் கௌரவிக்கப்பட்டது அதுவே முதல்முறையாகும்.
கள்ளக்குறிச்சி தவிர அனைத்து மாவட்டங்களிலும் உதவி அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தவிர தமிழகத்தின் பிற அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நேரில் சென்று பேரிடர் காலங்களில் நிவாரண நிதிகளை வழங்கியுள்ளார்.
கொரோனா நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி மற்றும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி என இதுவரை மொத்தம் சுமார் 1.60 கோடிக்கும் அதிகமான தொகையை அவர் தமிழக அரசுக்கு நிதியாகப் பங்களிப்பு செய்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள தற்போதைய சூழலில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத் தனது பங்களிப்பாக மேலும் 10,000 ரூபாய் நிதியை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீண் குமாரிடம் பூல் பாண்டியன் நேரில் ஒப்படைத்துள்ளார்.
ஒரு சாதாரண யாசகரின் இந்த அசாத்தியமான தர்மச் சிந்தனை ஒட்டுமொத்த தமிழகத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
(வீடியோ இங்கே )