கல்வியில் சாதிக்கும் பெண்கள்; பின்தங்கும் நுவரெலியா: விசேட அறிக்கை!
இலங்கையில் பாடசாலை கல்வி மற்றும் உயர் கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து காணப்படுவதுடன், குறைந்த கல்வியறிவு கொண்ட மாவட்டங்களில் நுவரெலியாவும் உள்ளடங்கியுள்ளதாக தொகைமதிப்பு மற்றம் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில், நாட்டின் கல்வி நிலை குறித்த தகவல்களிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இலங்கையில் 5 முதல் 24 வயதுக்குட்பட்ட மொத்த மக்கள்தொகையான 6,695,363 நபர்களில் 4,351,225 பேர் (65.0 வீதம்) பாடசாலைக் கல்வியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பாலின ரீதியாகப் பார்க்கும்போது, பெண்களின் பங்களிப்பு (65.9 வீதம்) ஆண்களை விட (64.1 வீதம்) சற்று அதிகமாகக் காணப்படுகிறது.
வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் ஆராயும்போது, 05 - 10 வயது: இப்பிரிவில் 83.4 வீத சிறுவர்கள் கல்வியில் ஈடுபட்டுள்ளனர். 11 - 14 வயது: மிக அதிகப்படியான பங்களிப்பு இந்தப் பிரிவிலேயே காணப்படுகிறது (95.1 வீதம்). 15 - 16 வயது: 91.5 வீதம் பேர் கல்வியைத் தொடர்கின்றனர்.
17 - 18 வயது: உயர்தரக் கல்வி நிலையை அடையும்போது இது 67.3 வீதம் ஆகக் குறைகிறது. குறிப்பாக இந்தப் பிரிவில் பெண்களின் பங்களிப்பு 73.1 வீதமாக இருக்கும் அதேவேளை, ஆண்களின் பங்களிப்பு 61.5 வீதமாக மாத்திரமே உள்ளது.
19 - 24 வயது: உயர்கல்வி அல்லது தொழில்சார் கல்விக்குச் செல்லும் இப்பிரிவில் 15.1 வீதம் பேர் மாத்திரமே கல்வியில் ஈடுபட்டுள்ளனர். 25 வயதுக்கு மேற்பட்ட 13.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையில், கல்வித் தகைமை மட்டங்களில் கடந்த 12 ஆண்டுகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் 4.7 வீதமாக இருந்த கல்வி அறிவு அற்றவர்களின் விகிதம், 2024 இல் 2.9 வீதமாகக் குறைந்துள்ளது. இதில் பெண்களிடையே 3.6 வீதமாகவும் ஆண்களிடையே 2.1 வீதமாகவும் உள்ளது.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாத்திரம் பயின்றவர்களின் விகிதம் 18.4 வீதத்திலிருந்து 12.5 வீதமாகக் குறைந்துள்ளது. இது மக்கள் உயர்கல்வியை நோக்கி நகர்வதைக் காட்டுகிறது.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் (58.4 வீதம்) இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றுள்ளனர். இதில் க.கொ.த. சாதாரணத் தர தகைமை பெற்றவர்களின் விகிதம் 2012 இல் 19.1 வீதத்தில் இருந்து, 2024 இல் 22.0 வீதமாக உயர்ந்துள்ளது.
மூன்றாம் நிலை மற்றும் உயர்கல்வி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2012 இல் 18.2 வீதமாக இருந்த மூன்றாம் நிலைக் கல்வித் தகைமை, 2024 இல் 26.2 வீதமாக அதிகரித்துள்ளது.
2024 தரவுகளின்படி, 5.6 வீதம் பேர் பட்டதாரிகளாகவும், 0.5 வீதம் பேர் முதுகலைப் பட்டதாரிகளாகவும், 0.1 வீதம் பேர் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர்.
பெண்களின் உயர்கல்வித் தகைமை (28.0 வீதம்) ஆண்களை விட (24.1 வீதம்) முன்னிலையில் உள்ளது. இலங்கையின் மாவட்டங்களுக்கு இடையிலான கல்வித் தகைமைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.
நுவரெலியா (8.3 வீதம்), மட்டக்களப்பு (6.6 வீதம்), பதுளை (6.0 வீதம்) மற்றும் அம்பாறை (4.2 வீதம்) ஆகிய மாவட்டங்களில் கல்வி அறிவு அற்றவர்களின் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. இருப்பினும், 2012 உடன் ஒப்பிடுகையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விகிதம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலேயே கொழும்பு மாவட்டத்தில் மாத்திரமே க.பொ.த. உயர்தரம் அல்லது அதற்கு மேற்பட்ட தகைமை கொண்டவர்கள் மிக அதிக அளவில் (40.1 வீதம்) உள்ளனர்.
ஏனைய மாவட்டங்களில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்றவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். யாழ்ப்பாணம் (0.7 வீதம்) மற்றும் கொழும்பு (1.6 வீதம்) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்த அளவிலான 'கல்வி பெறாதவர்களைக்' கொண்ட மாவட்டங்களாக உள்ளன.
2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நுவரெலியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் க.பொ.த. சாதாரணத் தரத்துக்குக் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து, உயர் கல்வித் தகைமை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இறுதியாக கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் பெண்களின் கல்வி முன்னேற்றம், உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மாவட்ட ரீதியான கல்வி இடைவெளிகள் குறைந்து வருகின்றமை ஆகியவற்றை இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
(வீடியோ இங்கே