பௌத்த பிக்குகளின் “அமைதிக்கான நடைப் பயணத்தில்” இணையும் 'அலோகா'
இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் 21 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள “அமைதிக்கான நடைப் பயணத்தில்” (Walk for Peace), அமெரிக்காவிலிருந்து வரும் பௌத்தத் பிக்குமாருடன் 'அலோகா' என்ற புகழ்பெற்ற நாயும் இணையவுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 2,300 மைல்கள் தூரம் பௌத்த பிக்குகளுடன் பயணித்து உலகப் புகழ்பெற்ற இந்த நாய், தற்போது இலங்கை மக்களின் கவனத்தையும் ஈர்க்கவுள்ளது.
அமெரிக்க அமைதி நடைபயணத்தின் நிறுவுனர் பன்னாகர தேரர் தலைமையில் 12 பிக்குகள் பங்கேற்கும் இந்தப் பேரணி, ஏப்ரல் 21ஆம் திகதி அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் ஆசீர்வாதங்களுடன் தொடங்குகிறது.
இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக, புனித வெள்ளரச மரத்தின் கன்று ஒன்றும் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி தம்புள்ளையில் இருந்து தொடங்கும் இந்தப் பேரணி நாவுல, மாத்தளை, கண்டி, கடுகண்ணாவை, கேகாலை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சென்றடையும்.
அங்கு நடைபெறும் நிறைவு விழாவில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க புனித மரக்கன்றை அமெரிக்கத் பிக்குமாரிடம் ஒப்படைப்பார்.
ஆலோகா நாயை வானூர்தி மூலம் பாதுகாப்பாக அழைத்து வரும் முயற்சிகள் தற்போது 50-50 சதவீத நிலையில் உள்ளதாகவும், அதனை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேரணியின் போது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகளை அந்தந்தப் பகுதி காவல்துறையினர் கவனிக்க உள்ளனர்.