மத்திய கிழக்கு போர்: வான்வழிப் போக்குவரத்து 30 சதவீதத்தால் வீழ்ச்சி!
மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக இலங்கையின் வான்வெளிச் செயற்பாடுகள் மற்றும் வானூர்தி நிலைய வருமானம் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் ஆண்டிறுதி இலக்குகளை வெற்றிகரமாக எட்ட முடியும் என சிவில் வானூர்திப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
போர் ஆரம்பமான தொடக்க நாட்களில் வானூர்தி செயற்பாடுகள் சுமார் 60 வீதம் வரை குறைந்திருந்தன. தற்போது அந்த நிலைமை சற்றே முன்னேற்றமடைந்துள்ள போதிலும் இன்னும் 30 வீதம் வீழ்ச்சி காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வானூர்திகளின் வருகை குறைந்தமையால் வானூர்தி நிலையங்கள் ஈட்டும் வருமானம் குறைந்துள்ளது. எனினும் துல்லியமான நிதி இழப்புகள் இதுவரை முழுமையாகக் கணக்கிடப்படவில்லை. வான்வழிப் போக்குவரத்துத் தடைகளால் சுற்றுலாத்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வானூர்தி நிறுவனங்களுக்கான காப்புறுதிச் செலவுகள் மற்றும் எரிபொருள் செலவுகள் அதிகரித்துள்ளமையும் இதற்குக் காரணமாகும். "இந்த ஏப்ரல் மாதத்திற்குள் போர்ச் சூழல் முடிவுக்கு வரும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
அவ்வாறு போர் நின்றால் எஞ்சியுள்ள காலப்பகுதியில் சுற்றுலாத்துறையை விரைவாக மேம்படுத்தி சிவில் வானூர்திப் போக்குவரத்துத் துறைக்கான எமது திட்டமிட்ட ஆண்டிறுதி இலக்குகளை அடைய முடியும்" எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சூழலில் மாற்று வழிகள் இல்லாத போதிலும் போர் நின்றவுடன் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் வானூர்திப் போக்குவரத்துத் துறையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும் என அரசாங்கம் நம்புகிறது.
(வீடியோ இங்கே )