ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல்: ஷமீந்திர ராஜபக்ச, பிரியங்கா விஜேநாயக்கவுக்கு பிடியாணை!
ஸ்ரீலங்கன் எயார்பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இந்த உத்தரவை வழங்கினார்.
இந்த உத்தரவை இலங்கையிலுள்ள அனைத்து வானூர்தி நிலையங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருகை தந்தால், அவர்களை உடனடியாகக் கைது செய்து கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல்களின் போது பாரியளவிலான நிதி முறைகேடுகள் மற்றும் கையூட்டல் பெறப்பட்டதாக நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாகக் கருதப்படும் குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகவே இந்தத் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )