எரிபொருள் விலையேற்றத்தால் 45 இலட்சம் பேருக்குப் பாதிப்பு: சஜித் அவசர கோரிக்கை!
எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், இந்த விலை உயர்வு உற்பத்திச் சங்கிலி மற்றும் வழங்கல்-தேவை கட்டமைப்பில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்படி,சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக 'பராட்டே' சட்டத்தை நீக்குமாறு அவர் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.
சுமார் 45 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் இத்துறை வீழ்ச்சியடைந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குடும்பப் பொருளாதாரம் சீர்குலைந்து, உற்பத்தித் திறன் பலவீனமடையும் என அவர் எச்சரித்தார்.
எனவே, தற்போதைய அரசாங்கம் இதில் தலையிட்டு அவர்களுக்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பராட்டே சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், வீழ்ச்சியடைந்துள்ள வணிகங்களுக்காக விசேட கடன் மறுசீரமைப்புத் திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலப்பொருள் விநியோகஸ்தர்கள் விலைகளை அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர். இந்த விலையேற்றத்தை நுகர்வோர் மீது திணித்தால் சந்தைப் போட்டித்தன்மை இல்லாமல் போய்விடும்.
எனவே, அரசாங்கம் இவர்களுக்காக விசேட பொருளாதாரப் பொதி ஒன்றைத் தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்