இலங்கை கேட்டால் எந்நேரமும் எண்ணெய் வழங்கத் தயார் - ஈரான் தூதுவர் உறுதி!
மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், மசகு எண்ணெய் அல்லது ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு ஈரான் எந்நேரமும் தயாராக உள்ளது.
இலங்கை மக்கள் எவ்வித இன்னல்களையும் எதிர்கொள்வதை ஈரான் விரும்புவதில்லை என அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு வான்பரப்புகள் மற்றும் கடல் வழிகள் தொடர்பில் எழுந்துள்ள அச்சங்களுக்கு பதிலளித்த தூதுவர், ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக ஹார்முஸ் நீரிணையை மூடவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் இலங்கையுடனான வர்த்தக உறவுகள் தடையின்றித் தொடரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது அமெரிக்காவின் தாக்குதலுக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பலான 'IRIS Dena'கப்பலிலிருந்த மாலுமிகளை மீட்பதில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்பைத் தூதுவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
இதேவேளை ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் தற்போதைய சூழலில் நாடு திரும்ப விரும்பினால், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஈரானிய அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்