இர்ஃபான் பதான் வலியுறுத்தல்: ரோஹித் சர்மா முழுநேர வீரராக மைதானத்தில் அவசியம் – மும்பை இந்தியன்ஸ்க்கு அனுபவம் முக்கியம்
ஐபிஎல் 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவை ஒரு களத்தடுப்பு வீரராகவும் தலைவராகவும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். கடந்த 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் தலைவரான ரோகித் சர்மா பெரும்பாலும் 'இம்பாக்ட் பிளேயர்' (Impact Player) ஆகவே களமிறக்கப்பட்டார்.
இதன் காரணமாக, பல போட்டிகளில் மும்பை அணி களத்தடுப்பில் ஈடுபடும் போது அவர் மைதானத்தில் இருக்கவில்லை. இது குறித்து தனது யூடியூப் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள இர்ஃபான் பதான், 38 வயதான ரோகித் சர்மாவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த முறை அவர் இம்பாக்ட் பிளேயராகச் சிறப்பாகச் செயற்பட்டார். ஆனால், அவர் மைதானத்தில் இருப்பது மிக முக்கியம் என நான் கருதுகிறேன். ஐந்து முறை கிண்ணத்தை வென்று கொடுத்த ஒரு வெற்றிகரமான தலைவரின் சிந்தனை எப்போதும் மைதானத்தில் செயற்பட்டுக் கொண்டே இருக்கும்.
எனவே, தற்போதைய தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆலோசனைகளை வழங்கவும், அணியை வழிநடத்தவும் ரோகித்தின் தலைமைத்துவப் பண்பை மும்பை அணி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு ஐபிஎல் பருவகாலங்களிலும் ரோகித் சர்மா தலா 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார். குறிப்பாக, 2025ஆம் ஆண்டு தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய அவர், 149.29 என்ற அதிரடியான ஓட்ட விகிதத்துடன் 418 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் நான்கு அரைச்சதங்களும் அடங்கும்.
ரோகித்தின் இந்த அதிரடி ஆட்டமும் மேம்பட்ட ஓட்ட சராசரியும் இந்த ஆண்டும் தொடரும் என எதிர்பார்ப்பதாக பதான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதலாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி மார்ச் 29ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்