எரிபொருள் QR முறைமை: மீள் அறிமுகமான சில நாட்களில் 56 லட்சம் பேர் பதிவு.
இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை (19) மாலை 6.00 மணி நிலவரப்படி, மொத்தம் 5,603,104 பேர் இந்த முறைமையில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். அமைச்சின் தரவுகளின்படி, ஒரே நாளில் மட்டும் 503,236 புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மார்ச் 15 இல் 42,899 பதிவுகள், மார்ச் 16 இல் 337,068 பதிவுகள், மார்ச் 17 இல் 395,349 பதிவுகள், மார்ச் 18 இல் 301,463 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தார்.
தொடக்கத்தில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காணப்பட்ட போதிலும், தற்போது இந்த முறைமை எவ்விதத் தடங்கலுமின்றி சீராக இயங்கி வருவதாக அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.