கட்டார் நாட்டின் இளவரசருக்கும், அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்!
கட்டார் நாட்டின் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கட்டாரின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது ஜனாதிபதி விசாரித்ததோடு, கட்டார் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு எதிராகத் தொடரும் ஆக்கிரமிப்பின் பின்னணியில், இலங்கையின் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டாரிலுள்ள இலங்கை சமூகத்தினரின் நல்வாழ்வு குறித்து, கட்டார் இளவரசர், ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார். தனது எல்லைக்குள் வசிக்கும் அனைவர் மீதும் அரசு அக்கறையும் கவலையும் கொண்டுள்ளது என்றும் கட்டார் இளவரசர் கூறியுள்ளார்.
இராணுவ மோதல் அதிகரிப்பு மற்றும் அதன் நேரடி விளைவுகளால் எரிசக்தித் துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்ட பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், பதற்றம் அதிகரிப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், பதட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராஜதந்திரத் தீர்வுகள் மூலம் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் வலுப்படுத்தவும் சர்வதேச மற்றும் பிராந்திய முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை கட்டார் இளவரசரும், இலங்கை ஜனாதிபதியும் சுட்டிக்காட்டியுள்ளனர்.